×

மகள் சாவில் சந்தேகம்: போலீசில் தந்தை புகார் கோட்டாட்சியர் விசாரணை

விருத்தாசலம், டிச. 9: விருத்தாசலம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(32). சிசிடிவி பொருத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி(31). இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தினேஷ்குமார், தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்முருகன்(43) என்பவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.1.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். பணம் தர தாமதமானதால், நேற்று முன்தினம் இரவு ஆயியார் மடம் தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவரது அறைக்கு தினேஷ்குமாரை அழைத்துச் சென்று செந்தில்முருகன், அவரது மைத்துனர் மு.பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(43), லூகாஸ் தெருவைச் சேர்ந்த தமிழரசன்(50) ஆகியோர் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும், தினேஷ்குமார் மனைவியை செல்போனில் அழைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில் தினேஷ் அங்கிருந்து வீட்டிற்கு சென்றபோது செல்வி தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை சுப்பிரமணியன், தனது மகள் செல்வி சாவில் சந்தேகம் உள்ளது. அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதால்தான் தற்கொலை செய்து கொண்டார். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2 மணியளவில் அவரது உடலை பார்க்க அரசு மருத்துவமனைக்கு கோட்டாட்சியர் மனோகரர் வந்தார்.

அப்போது, செல்வியின் உறவினர்கள், செல்வியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரை முற்றுகையிட்டனர். விருத்தாசலம் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்விக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில், விருத்தாசலம் கோட்டாட்சியர் மனோகர் அவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மகள் சாவில் சந்தேகம்: போலீசில் தந்தை புகார் கோட்டாட்சியர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kotaktaki ,Vridthachalam ,Dinesh Kumar ,Vrudhachalam Kamarajar Street ,Kotaksiar ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...